தென்தாமரைகுளம்: சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டனர். சாமிதோப்பில் அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதி உள்ளது. இங்கு வருடந்தோரும் தை, ஆவணி மற்றும் வைகாசி மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருட வைகாசி திருவிழா இன்று வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல் நாள் கொடியேற்ற நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு முத்திரிபதமிடுதலும், 5 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், காலை 6 மணிக்கு திருக்கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அய்யா வழி பக்தர்களின் அய்யா சிவ சிவ அரகரா அரகரா என்று பக்தி கோஷமிட்டனர்.
பின்னர் திருக்கொடியை குரு பால ஜனாதிபதி ஏற்றி வைத்தார்.குருமார்கள் பால லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியறை பணிவிடைகளை குருமார்கள் வக்கீல் ஜனா யுகேந்த், டாக்டர் ஜனாவைகுந்த் ஆகியோர் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு இனிமம் வழங்கப்பட்டது. தொடர்ந்து வாகன பவனி நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சியில் குமரி நெல்லை தூத்துக்குடி உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர் . தொடர்ந்து பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம் நடைபெற்றது. இன்று இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பதியை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது.
வருகிற 3-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை எட்டாம் திருவிழா நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டசுவாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரிகிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சியும், தொடர்ந்து பல கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று மக்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யாவின் தவக்கோலகாட்சியும் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது. 9-ம் திருவிழாவில் அனுமன் வாகனத்திலும், பத்தாம் நாள் இந்திர வாகனத்திலும் அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அடுத்த மாதம் 6ம் தேதி திங்கள் கிழமை 11ம் திருவிழா நடைபெறுகிறது. அன்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று இரவு ரிஷப வாகனத்தில் அய்யா வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை மாலை பணிவிடையும் மதியம் உச்சி படிப்பும் இரவு வாகன பவனியும் அன்னதானமும், கலையரங்கில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் தினமும் மூன்று வேளை தலைமைப்பதியின் முன்பு அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை மூலம் அய்யாவழி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.